குழந்தை திருமணத்தை தடுக்கும் சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, சமூக சீர்திருத்தத்துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மகளிர், குழந்தைகள், மூன்றாம் பாலினர், மூத்த குடிமக்கள் ஆகியோரின் பாதுகாப்பு, உரிமை மற்றும் நலனை உறுதி செய்ய வேண்டும். பெண் கல்வி மற்றும் சமூகச் சீர்த்திருத்தங்களுக்காகச் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளில் குறிப்பாக, திருமண நிதியுதவி திட்டங்களில் தகுதி வாய்ந்த பயனாளிகள் எவரும் விடுபடாமல் உரிய காலத்தில் பயன்களை வழங்க வேண்டும்.

குழந்தைத் திருமணம், பெண்சிசுக் கொலை போன்ற சமூக அவலங்களைக் களைய உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இதுகுறித்த விவரங்கள் அனைவரையும் சென்றடையச் செய்ய வேண்டும். அதற்கான சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெறும் விழுப்புரம், திண்டுக்கல், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் தேனி மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தமிழகத்தை ஊட்டச்சத்துக் குறைபாடில்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும். பாதுகாப்பு தேவைப்படும் அனைத்து குழந்தைகளையும் கண்டறிந்து பராமரிப்பு இல்லங்கள் மூலம் சிறப்பான கல்வி அளிக்க வேண்டும்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாகத் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளை கண்டறிந்து தற்போது அறிவிக்கப்பட்ட வைப்புத் தொகை திட்டத்தில் பயன்பெற உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

திருநங்கையர் கல்வியறிவு பெற்று, சுயமாக இயங்கவும், பாதுகாப்புடன் சிறப்பாக வாழவும் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் திருநங்கையர் நலவாரியத்தின் மூலம் மேற்கொள்ள வேண்டும்.

அரசு உதவியுடன் செயல்படும் 129 முதியோர்களுக்கான இல்லங்களை அவ்வப்போது உயர் அலுவலர்கள் பார்வையிட்டு, அந்த இல்லங்கள் அனைத்து வசதிகளுடன் இயங்குவதையும், முதியோர் உடல்நலத்துடன் மகிழ்வுடன் இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.

பணிபுரியும் மகளிர் விடுதி இல்லாத மாவட்டங்களில் விடுதிகள் அமைக்க வேண்டும்.

சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமைக்கான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளவும், பெண் கல்வியை உறுதி செய்யவும், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சமூக சீர்திருத்தம் குறித்த பேச்சுப்போட்டிகள், கட்டுரைப்போட்டிகளை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!