இன்று முதல் ஆசிரியர்கள், அதிபர்களையும் பணிக்கு வர உத்தரவு!

இன்று முதல் அனைத்து அரச பணியாளர்களும் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய வழமைப் போன்று அரச பணிகளில் ஈடுபடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளரால், அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறிக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அரச பணியாளர்களை சுழற்சி முறையிலும், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலும் அழைத்து பணி செய்விக்கும் வகையில் வெளியிட்ட அனைத்து சுற்றுநிருபங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், சகல அரச பணியாளர்களையும் வழமை போன்று சேவைக்கு அழைப்பதற்கான சுற்று நிருபத்துக்கு அமைய, கல்விசார்ந்த துறையினரும் செயற்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இது தொடர்பான கடிதங்களை உரிய தரப்புக்கு அனுப்பி வைத்துள்ளதோடு, இதற்கு மேலதிகமாக அனைத்து மாகாண கல்வி திணைக்களங்கள், வலய மற்றும் கோட்ட கல்வி அதிகாரிகளும் தங்களது பணிகளுக்கு திரும்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாண, வலய மற்றும் பிராந்திய கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் அண்மையில் வெளியிடப்பட்ட அரச பணியாளர்கள் சுற்று நிரூபத்திற்கு அமைய செயல்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்று முதல் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்பட்ட கடமைக்கு சமுகமளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!