இராணுவத்தினரால் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது! – தலதா அத்துகோரல

வைத்தியர்களுக்கு போர்க்களத்தில் சென்று யுத்தத்தில் ஈடுபட முடியாது. அதேபோன்று யுத்தத்திற்கு பயிற்றுவிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது.

இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியதையே ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும் கூறியது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தாம் அரசாங்கம் கூறுவதையே செய்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் என்றால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறுவதை செய்கின்றார்களா ?

அல்லது சுகாதார அமைச்சர் கூறுவதை செய்கின்றார்களா? கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பில் நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணரான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறுவதைக் கூட அரசாங்கம் செவிமடுப்பதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் கூறிய விடயத்தை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் தற்போது பாராளுமன்றத்தில் அவர் தெரிவிக்கும் இதே விடயத்தையே ஆரம்பத்திலேயே ஐக்கிய மக்கள் சக்தியும் கூறியது.

எவ்வாறு வைத்தியர்களுக்கு போர்க்களத்திற்கு சென்று யுத்தம் புரிய முடியாதோ, அதே போன்று யுத்தத்திற்கு பயிற்றுவிக்கப்பட்ட இராணுவத்தினரால் மருத்துவத்துறையுடன் தொடர்புடைய கோவிட் பரவலைக்கட்டுப்படுத்த முடியாது.

பொய் வாக்குறுதிகளைக் கூறி ஜனாதிபதித் தேர்தலில் மக்களை ஏமாற்றியதைப் போன்றே , பொதுத் தேர்தலிலும் இந்த அரசாங்கம் செயற்பட்டுள்ளது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!