‘கற்பழிப்பு, கொலைக்கு எதிராக போராடுவது குற்றமென்றால் நான் குற்றவாளிதான்’ – ராகுல் காந்தி!

இரக்கமும், அனுதாபமும் காட்டுவது குற்றம் என்றால் நான் குற்றவாளிதான் என்று ராகுல் காந்தி இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, வேளாண் சட்டங்கள், எரிபொருள் விலை உயர்வு உள்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மத்திய அரசை அடிக்கடி டிவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கை டிவிட்டர் இந்தியா நிறுவனம் முடக்கியது.

ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கை முடக்கியதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக கொந்தளித்தனர். அதேசமயம் மத்திய அரசு மீதான தாக்குதலை ராகுல் காந்தி கைவிடவில்லை. இன்ஸ்டாகிராமில் தனது கருத்துக்களை ராகுல் காந்தி தெரிவித்து வருகிறார். தனது டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்ட விவகாரத்தில் டிவிட்டர் நிறுவனத்தையும், மத்திய அரசையும் மறைமுகமாக ஒரு பிடி பிடித்துள்ளார்.

அவர்கள் எங்களை ஒரு தளத்தில் முடக்க முடியும் ஆனால் மக்களுக்கான எங்கள் குரலை அவர்கள் பூட்ட முடியாது. இரக்கமும், அனுதாபமும் காட்டுவது குற்றம் என்றால் நான் குற்றவாளி. கற்பழிப்பு மற்றும் கொலை செய்யப்பட்டவருக்காக போராடுவது குற்றம் என்றால் நான் குற்றவாளி. கருணை, அன்பு மற்றும் நீதியின் செய்தி உலகளாவியது. 130 கோடி இந்தியர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். பயப்படாதே, உண்மை மட்டுமே வெல்லும் என்று பதிவு செய்து இருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!