காத்திரமான முடிவுகளை அரசு எடுக்க வேண்டும்!- வடக்கு – கிழக்கு ஆயர்கள் மன்றம்.

அரசானது மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தி, நாடு கோவிட் பெருந்தொற்றிலிருந்து விடுபடவும், நாட்டில் சமத்துவமும் சமாதானமும் நிலவவும், நீதி கேட்டுப் போராடுபவர்களின் அடிப்படைக் கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்படவும் காத்திரமான முடிவுகளை எடுத்துச் செயற்பட வேண்டும் என சமகால சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வடக்கு – கிழக்கு ஆயர்கள் மன்றத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகெங்கும் மக்கள் கொத்துக்கொத்தாக தொற்றாளர்களாக இனங்காணப்பட்டும், தனிமைப்படுத்தப்பட்டும், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டும், இறுதியில் பல மில்லியன் கணக்கில் இறந்தும் உள்ளனர்.

இத்தகைய இக்கட்டான தருணத்தில் உலக மாந்தர் அனைவரும் இன, குல, சாதி, சமய, அரசியல் பேதங்களைக் கடந்து ஒரே இறைவனின் பிள்ளைகள் என்கிற உணர்வோடு ஒருமித்துச் செயற்பட அழைக்கப்பட்டுள்ளோம்.

இன்று உலகளவில் தொழிற்துறைகள் முற்றாகவோ, பாதியளவிலோ செயலிழந்துள்ளன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. மாணவர்களின் சுமுகமான பாடசாலைக் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதன் காரணமாக அவர்கள் மத்தியில் வெறுப்புணர்வு, பிடிப்பற்ற தன்மை, தனிமைப்படுத்தப்பட்ட சூழல் போன்ற உளவியல் தாக்கங்கள் தோன்றியுள்ளன.

மறுபக்கத்தில் முதியோரும், நீண்டகால தொற்று நோயினால் பாதிக்கப்பட்டோரும் தனிமைப்படுத்தலின் காரணமாக தமது எஞ்சிய நாட்கள் குறித்த அச்சத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இப்பெரும் போராட்டத்தின் மத்தியில் சுகாதார, மருவத்துப் பணியாளர்களின் அர்ப்பணம் நிறைந்த பணி மிகுந்த பாராட்டுதற்குரியது.

தங்களது இன்னுயிரையும் துச்சமென மதித்து, மிகுந்த அர்ப்பணிப்புடனும், சேவை மனங்பாங்குடனும் மருத்துவத் துறையினரும், சுகாதாரத் துறையினரும், முன்நிலைப் பணியாளர்களும், துப்பரவுப் பணியாளர்களும் பெருந்தொற்றிற்கு எதிரான போராட்டத்தில் கரம் கோர்த்துள்ளமையானது நமக்குப் புதிய நம்பிக்கையைத் தருகின்றது.

இவர்களுக்காக இடைவிடாது இறைவேண்டல் புரிவோம். எமது ஆதரவுக் கரத்தை அவர்கள் பால் நீட்டுவோம். இக்காலத்தில் எம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது நம் அனைவரினதும் தலையாய கடமையாகும்.

அரசும், சுகாதார அதிகாரிகளும் எமக்கு எடுத்துரைக்கும் வரை நாம் காலந்தாழ்த்தாது, அவதானத்துடனும், விழிப்புடனும் செயற்படுவோம். காலம் தாழ்த்தாது பரிந்துரைக்கப்படுகின்ற தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வோம்.

அத்தியாவசியத் தொடர்பாடல்களில் சமூக இடைவெளியைப் பேணுவோம். எப்போதும் முகக் கவசம் அணிவது, தொற்று நீக்கிகளைப் பயன்படுத்தியோ அல்லது கைகளுக்கு சவர்க்காரம் இட்டு எம்மையே நாம் சுத்தமாக வைத்திருப்பது, தேவையற்ற, வீனாண ஒன்றுகூடல்களைத் தவிர்ப்பது போன்ற செயற்பாடுகளை கைக்கொள்ள வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும்.

பொது முடக்கம் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் அற்ற சூழ்நிலைகளால் தேவையில் இருப்போருக்கு எமது தாராள உதவிகளை மனமுவந்து செய்வோம். தனித்தோ குழுவாகவோ தொடர்புகளை ஏற்படுத்தி ஆதரவின்றி இருக்கும் மக்களுக்கு உதவிடுவோம்.

வழமைபோல ஆலயங்களிலும் கோயில்களிலும் ஒன்றுகூடி வழிபாடுகளில் ஈடுபட முடியாவிட்டாலும் தனித்தோ குடும்பமாகவோ எமது ஆன்மீகத்தை ஆழப்படுத்த ஏதுவான காலமிது என்பதனை மறவாதிருப்போம்.

தனித்திருக்கும் அல்லது தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் காலங்களில் இறைவேண்டல், தியானம் போன்ற ஆன்மீகச் செயற்பாடுகளின் வாயிலாக இறைவனோடு ஒன்றித்து எமது ஆன்மீக வாழ்வினைப் பலப்படுத்திக் கொள்வோம்.

பொருளாதார ரீதியில் துயருறும் ஏழை மற்றும் நாளாந்தத் தொழில் புரியும் மக்களையும், நீதிகேட்டுப் போராடும் பல்வேறுபட்ட தரப்பினரின் நியாயமான கோரிக்கைகளையும் கருத்தில்கொண்டு, அரசானது மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தி, நாடு கோவிட் பெருந்தொற்றிலிருந்து விடுபடவும், நாட்டில் சமத்துவமும் சமாதானமும் நிலவவும், போராடும் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்படவும் காத்திரமான முடிவுகளை எடுத்து செயற்பட வேண்டும் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்.

நாமும் நம்பிக்கையோடு வாழ்ந்து அடுத்தவருக்கும் நம்பிக்கையை ஊட்டுவோம், விதைப்போம். இறைவன் தாமே எமது நட்டை எல்லா வகையான தீமைகளிலிருந்தும் விடுவித்து ஆசீர்வதிப்பாராக என்றுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!