எங்கள் நாட்டு மேகக்கூட்டங்களை இஸ்ரேல் திருடிவிட்டது – ஈரானின் விசித்திர குற்றச்சாட்டு

எங்கள் நாட்டு மேகக்கூட்டங்களை இஸ்ரேல் திருடிவிட்டதால் வறட்சி நிலவுகிறது என ஈரான் விசித்திரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

ஈரான் நாட்டின் பாதுகாப்புத் துறை இயக்குனர் கோலாம் ரேசா ஜலாலி பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசியதாவது:-

ஈரானில் பருவநிலை மாறிவருவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பருவநிலை மாற்றத்தில் வெளிநாட்டு தலையீடு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

இந்த பிராந்தியத்தில் இஸ்ரேல் மற்றும் மற்றொரு நாட்டின் கூட்டுக் குழு ஒன்று உள்ளது. இந்த குழுவானது, ஈரான் வான் எல்லைக்குள் வரும் மேகக் கூட்டங்கள் மழை பொழியாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான வேலையை செய்கின்றன. ஆப்கானிஸ்தானில் இருந்து மத்திய தரைக்கடல் பகுதி வரையிலான மலைப்பகுதிகளில் 2200 மீட்டர் அளவுக்கு பனி படர்ந்துள்ளது. ஆனால் ஈரானில் மட்டும் இல்லை. மேகம் மற்றும் பனி திருட்டு காரணமாக நாம் வறட்சியை எதிர்கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தங்கள் நாட்டு மழை வளத்தை திருடுவது தொடர்பாக ஈரான் அதிகாரிகள் மற்ற நாட்டின் மீது குற்றம்சாட்டுவது இது முதல் முறையல்ல. முன்னாள் அதிபர் மஹ்மூத் அகமதிநிஜாத் 2011ல் மேற்கத்திய நாடுகளை இவ்வாறு குறை கூறியது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!