பிரித்தானியாவில் 3 வயது மகனுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த பொலிஸ் அதிகாரி!

பிரித்தானியாவில் வீட்டில் தனது 3 வயது மகனுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக பொலிஸார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். இங்கிலாந்தில் கிண்டர்மின்ஸ்டர் நகரத்தில் உள்ள ஒரு வீட்டில், கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 13) 39 வயது மிக்க ஒரு ஆணும் அவரது 3 வயது மகனும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

இறந்தவரின் பெயர் டேவிட் லவுடன் (David Louden) என்பதும் மூன்று வயது பிள்ளையின் பெயர் ஹாரிசன் என்பதும் தெரியவந்தது.

டேவிட் லவுடன் ஒரு துப்பறியும் பொலிஸ் அதிகாரி ஆவார். அதனால் இவர்களது மரணத்தில் சந்தேகம் எழுந்ததால், கடந்த சில தினங்களாக West Mercia பொலிஸார் எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் விசாரணை நடத்திவந்தனர்.

ஆனால், நேற்று இருவரது பிரேத பரிசோதனை முடிவுகளும் கிடைத்த பிறகு, பொலிஸார் இந்த சம்பவம் ஒரு கொலை-தற்கொலை சம்பவம் என முடிவுக்கு வந்தனர்.

அதாவது, டேவிட் லவுடன் தனது மகனை கொலை செய்துவிட்டு பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என பிரேத பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பல கோண விசாரணைக்கு பிறகு, இந்த சம்பவம் தொடர்பாக வேறு யாரையும் சந்தேகிக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்திற்கு முன்பு, டேவிட் லவுடன் தனது மனைவி சமந்தா, மகன் ஹாரிசன் மற்றும் அடையாளம் தெரியாத மற்றோரு நபருடன் விடுமுறைக்கு வெளியூர் சென்றதாகவும், ஆனால் சுற்றுலாவை பாதியில் முடித்துக்கொண்டு தந்தையும் மகனும் மட்டுமே வீடு திரும்பியதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!