அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பை மேலும் நீட்டித்து அரசாணை பிறப்பிப்பு!

பட்ஜெட்டில் அறிவித்தபடி, அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசில் பணியாற்றும் திருமணமான பெண் ஊழியர்களுக்கு, இரண்டு குழந்தைகள் வரையில் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்த 2016-ம்ஆண்டு 6 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பானது 9 மாதங்களாக அதாவது 270 நாட்களாக உயர்த்தப்பட்டது. இந்த விடுப்பு பிரசவத்துக்கு முன், பின் என பிரித்து எடுத்துக் கொள்ளவும், விடுப்பு காலத்தில் முழு சம்பளம் வழங்கவும் அனுமதிக்கப்பட்டது. இதற்காக அடிப்படை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.

பட்ஜெட்டில் அறிவிப்பு

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்தார்.

இதையடுத்து, மகப்பேறு விடுப்பானது 12 மாதங்களாக உயர்த்தப்பட்டு, ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஜூலை 1-ம் தேதிக்கு முன்னரே பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பில் இருந்தால், 365 நாட்களுக்கு மிகாமல் அவர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!