பயங்கரவாத தடைச்சட்ட கைதிகள் குறித்து ஆலோசனை வழங்க குழு நியமனம்!

பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மற்றும் தடுப்பு காவல் உத்தரவின் கீழ் ​கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் தொடர்பில் ஆராய்தல், விடுதலை செய்தல், பிணை வழங்குதல் உள்ளிட்ட எதிர்கால தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு பரிந்துரைகள் மற்றும் ஆலோசனை வழங்க ஆலோசனை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த ஆலோசனை குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் 1979 இலக்க 48 பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13 -ன் படி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்ட பணிப்பாளர் நாயகம், உயர்நீதிமன்ற சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக்குழுவின் தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி அசோக டி சில்வா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர் ஹெயின்துடுவ மற்றும் ஓய்வு பெற்ற சொலிசிட்டர் நாயகம் சுஹந்த கம்லத் ஆகியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீண்ட காலமான ஆலோசனைக்குழு ஒன்று நியமிக்கப்படாத காரணத்தால் இதுவரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு தமது உரிமைகள் தொடர்பில் விடயங்களை முன்வைக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இந்த ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டதுடன் குறித்த சிறைக்கைதிகளுக்கு அவர்களது பிரச்சினைகளை முன்வைக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக ஹரிகுப்த ரோஹனதீர தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!