எனது தந்தை நட்டமடைந்து விட்டதால் முழு சம்பளத்தையும் வழங்க முடியாது! – டிலான் பெரேரா

தனது தந்தையார் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்து நட்டமடைந்துள்ளமையினால் தன்னால் முழு சம்பளத்தையும் கொரோனா நிதியத்து அர்ப்பணிப்புச் செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

“இன்று அரசியல்வாதிகள் பலரும் சம்பளத்தை கோவிட் நிதியத்திற்காக அன்பளிப்பு செய்கின்றனர். எனக்கு சம்பளத்தை முழுதும் அளிக்க முடியாது என்பதால் அரைச்சம்பளத்தை அன்பளிப்பு செய்கின்றேன்.

எனது தந்தையார் நிறுவனம் ஒன்றில் முதலிட்டதால் நட்டமடைந்தார். அதனால் இன்று முழுச் சம்பளத்தையும் நிதியத்திற்கு அளித்துவிட்டால் நான் பொருளாதார பக்கத்தில் சிரமத்தை எதிர்கொண்டுவிடுவேன்.

இதேவேளை, அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சியினர் கொரோனா தொற்றை பயன்படுத்துகின்றனர். அவர்கள் மக்களின் உயிருடன் விளையாடுவதை நிறுத்த வேண்டும்.

அரசியல்வாதிகள் என கூறிக்கொள்ளும் சிலர் நாட்டை பாழடையச் செய்ய பார்க்கின்றனர். இவர்கள் அனைத்தையும் தவறான கோணத்திலேயே பார்க்கின்றனர்

வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக்கொண்ட நீங்கள் அப்பாவி விவசாயிகள், ஆசிரியர்களை பலிகொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.” என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!