கோவிட் வைரஸின் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்ட நபரொருவருக்கு ஏற்படக்கூடிய அபாயம் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மார்பு சிகிச்சை பிரிவின் வைத்திய நிபுணர் கோட்டாபய ரணசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.
அதன்படி டெல்டா திரிபால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எவ்வித அறிகுறிகளும் வெளிக்காட்டாமல் மாரடைப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறு அறிகுறிகள் இல்லாமல் மாரடைப்பு ஏற்படுவது மிகவும் ஆபத்தான நிலைமையாகும்.
கடந்த வாரத்தினுள் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 20இற்கும் அதிகமானோருக்கு அவசர சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
எனவே, இந்த அபாயநிலை காரணமாக எவருக்கேனும் மாரடைப்பு ஏற்படுவதற்கான அடிப்படை அறிகுறிகள் வெளிக்காட்டும் பட்சத்தில், அவரை உடனடியாக மருத்துவ சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிப்பது சாலச்சிறந்தது.
நாட்டில் கோவிட் முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளின்போது, இவ்வாறான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.
மூன்றாவது அலையின் போது தோற்றம் பெற்ற டெல்டா திரிபின் காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளது. இவ்வாறு மாரடைப்புக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதியாகும் பெரும்பாலானோர் இளம் வயதினர்.
இவர்கள் மாரடைப்புக்கு காரணமாகும் உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரோல், நீரிழிவு போன்ற எந்தவொரு நோய்களையும் கொண்டிராதவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!