வடக்கில் 680 பாடசாலைகளை மீள ஆரம்பிக்க அனுமதி

வடக்கு மாகாணத்தில் 200 இற்கு உட்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும், 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் சறோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ் தெரிவித்தார்.

கல்வி அமைச்சுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையே இடம்பெற்ற கூட்டத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையான ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகள் உள்ளன. அவற்றை உடனடியாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாகாணத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து பயணிக்கும் ஆசிரியர்களுக்கு வசதியாக சிறப்பு பேருந்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சரிடம் என்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய போக்குவரத்து அமைச்சருடன் பேசி அதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஆசிரியர்கள் சுகாதார நடைமுறையின் கீழ் தமது பயணத்தை முன்னெடுக்க முடியும். மேலும் ஆசிரியர்களுக்கு அவசர சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க பயிற்சியளிக்க மாகாண சபையின் நிதியில் சுகாதாரத் திணைக்களத்தை முன்னெடுக்க என்னால் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் ஒட்சி மீற்றர் உள்ளிட்ட சுகாதார உபகரணங்களை பெற்று ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் வழங்க அதிகாரிகளுக்குப் பணித்துள்ளேன்.

எனவே அனைத்து ஒழுங்குகளும் முடிவடையும் நிலையில் உள்ள நிலையில் ஆரம்ப பாடசாலைகள் திடீர் அறிவிப்புடன் ஆரம்பிக்கப்படும் – என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!