மத்தள விமான நிலையத்தின் ஊடாக விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுப்பு

மத்தள விமான நிலையத்தின் ஊடாக விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு உலகின் முன்னணி விமான சேவை நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் D. V. சானக தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது நான்கு விமான சேவை நிறுவனங்கள் தமது சேவைகளை முன்னெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அபுதாபியில் இருந்து மத்தளை வரையான விமான சேவைகள் எதிர்வரும் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் D. V. சானக தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த விமான சேவைகள் தவிர்ந்த , ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் மத்தளையில் இருந்து மேலும் பல விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, மாலே மற்றும் – கசகஸ்தான் ஆகிய விமான சேவைகளை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் D. V. சானக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சர்வதேச அளவில் செயலில் உள்ள சர்வதேச விமான நிலையமாகவும் கொவிட் பாதுகாப்புடைய விமான நிலையமாகவும் மத்தளை விமான நிலையம் மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!