பெரும்பான்மை மக்களின் விருப்பத்துடன் செயலாற்றுவது அவசியம்!

இணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களை, இரு நாடுகளினது மக்களுக்கும் சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.
நன்மை, தீமைகளை எடுத்துரைத்து, பெரும்பான்மையான மக்களின் விருப்பத்துடன் செயலாற்றுவது அத்தியாவசியம் என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் நேற்று முற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில், 1960, 70ஆம் நூற்றாண்டுகளில் காணப்பட்ட நட்புணர்வு மற்றும் தொடர்புகளை மீளக் கட்டியெழுப்புவதன் அவசியம் பற்றி, ஜனாதிபதி அவர்கள் தெளிவுபடுத்தினார். 1971இல், இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டுமென்று, அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க முன்வைத்த யோசனையைச் செயற்படுத்துவதற்கான பலத்தை அதிகரித்துக்கொள்ள, இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை உயர் மட்டத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டுமாயின், குறுகிய மற்றும் நீண்டகாலத் தேவைகளின் பொருட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் துல்லியமாக அடையாளம் காணவேண்டுமென்பது, இரு தரப்பினதும் கருத்தாக அமைந்திருந்தது.



தற்போது காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரைவாக அடையாளம் காண்பதுடன், மீனவச் சமுதாயத்துக்குக் கிடைக்கவேண்டிய நன்மைகளைப் பெற்றுக்கொடுத்து, இரு நாடுகளினதும் மீனவர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டியதன் அவசியத்தையும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

இரு நாடுகளுக்கு இடையில் காணப்படும் வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் தொடர்பிலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அவற்றுக்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தினார். யாழ்ப்பாணக் கோட்டையை மீட்ட தனது அனுபவத்தை எடுத்துக்கூறிய ஜனாதிபதி, காணாமற்போனோர், யுத்தம் காரணமாக கணவரை இழந்தோர் உள்ளிட்ட யுத்தத்தின் பக்க விளைவுகள் பற்றி, தான் நல்ல புரிதல் கொண்டிருப்பதாக எடுத்துரைத்தார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பலவீனங்களைப் போன்றே அதில் காணப்படும் பலம் தொடர்பிலும் கண்டறிந்து செயற்படுவதன் தேவை தொடர்பிலும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
இலங்கையிலிருந்து சென்ற தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தனது எதிர்பார்ப்பென்று தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களை வெற்றிகரமானதாக்கிக்கொள்ள, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரின் போது உரையாற்றி, புலம்பெயர் தமிழர்களுக்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்ததாகவும், ஹர்ஷ் வர்தன் ஷரிங்லாவிடம் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்காகதத் தனது அரசாங்கம் கடந்த காலங்களில் முன்னெடுத்திருந்த நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, யுத்த காலத்தின் போது பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டிருந்த காணிகளில் 90 சதவீதத்துக்கும் மேலானவை, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்றும், ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார்.
அதேபோன்று, காணாமற்போனோரது குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்த ஜனாதிபதி, யுத்தத்தால் ஏற்பட்ட ஏனைய பிரச்சினைகளுக்கும் உடன் தீர்வு வழங்குவதற்கான தேவை தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

இரு நாடுகளினதும் புவியியல் இருப்பிடம் தொடர்பில் தெளிவான புரிந்துணர்வு இருப்பின், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய எந்தவொரு செயற்பாட்டுக்கும் இலங்கையைப் பயன்படுத்திக்கொள்ள இடமளிக்கப் போவதில்லை என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

சீனாவுடனான தொடர்புகள் பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைத்த ஜனாதிபதி, அது தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாமென்று, இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் தெரிவித்தார். இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதனால், இந்திய முதலீட்டாளர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தொடர்பான பிரச்சினையை, இரு நாடுகளுக்கும் பயனுள்ள வகையில் தீர்த்துக்கொள்ளும் பொறுப்பு, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும், ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பிலும், இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் முப்படையினருக்கு, இந்தியாவில் வழங்கப்படும் பயிற்சிகளை விரிவாக்குவது தொடர்பிலும், இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களை அடையாளம் கண்டு, இரு நாடுகளுக்கிடையில் மின்சாரக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.
கொவிட் தடுப்பூசி ஏற்றல் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பாராட்டிய இந்திய வெளிவிவகாரச் செயலாளர், கொவிட் கட்டுப்பாட்டுக்கு இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் நீண்ட நேர தெளிவுபடுத்தல் தொடர்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர், இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்துக்கள் சமனாக இருப்பதால், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புணர்வைத் தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியுமென்றும் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமரை இலங்கைக்கு இராஜாங்க விஜயமொன்றை மேற்கொள்ள அழைப்பதாகவும், இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே ஆகியோரும், இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!