மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி – தீர்ப்பு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து

டெல்லியில் நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே உண்டு என சுப்ரீம் கோர்ட் இன்று அளித்துள்ள தீர்ப்பு, மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் நிலவிய அதிகார போட்டி தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில், நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உண்டு, அமைச்சரவையின் ஆலோசனையின் பெயரில் துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும், துணை நிலை ஆளுநருக்கென தனி அதிகாரம் எதுவும் கிடையாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. எனினும், யூனியன் பிரதேசங்களில் மத்திய மாநில அரசுகள் ஒன்றினைந்து பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு டெல்லி ஆம் ஆத்மி கட்சிக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

‘டெல்லி மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி’ என தீர்ப்பு தொடர்பாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கூறுகையில், “இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. இனி கோப்புகளை துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப தேவையில்லை. அவருக்கு தகவல் மட்டும் தெரிவித்தால் போதுமானது” என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!