12 ஆண்டுகளாக குற்றச்சாட்டுகளின்றி தடுப்பில் இருந்த தமிழ் அரசியல் கைதி விடுதலை!

12 ஆண்டுகளாக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி ஒருவர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சின்னப்பனங்காடு, அக்கரைப்பற்று, அம்பாறை என்ற முகவரியைச் சேர்ந்த 29 வயதுடைய கதிரவேலு கபிலன்,கடந்த 20.05.2009 யுத்த நிறைவுக்குப் பின் விடுதலைப் புலிகளுடன் சம்மந்தப்பட்டதாக சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சுமார் ஒன்றரை வருட காலம் பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டதன் பின்னர் 15.02.2011 அன்று மொனராகலை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கடந்த 12 ஆண்டுகளாக அவருக்கெதிராக குற்றச்சாட்டுப் பத்திரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்பட்டுருக்கவில்லை.

இந்நிலையில், சிரேஸ்ட சட்டத்தரணி பஞ்சாட்சரம் நீதிமன்றில் தர்க்க நியாயங்களை சுட்டிக்காட்டி கபிலனின் விடுதலையை உறுதி செய்யுமாறு மன்றில் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், குறித்த தழிழ் அரசியல் கைதிக்கெதிராக குற்றத்தை ஒப்புவிக்க போதிய சாட்சியாதாரங்கள் காணப்படாத காரணத்தைக்கூறி அவரை நிரபராதி என விடுதலை செய்தது.

கொழும்பு-புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கதிரவேலு கபிலன் பீ.சி.ஆர் பரிசோதனைகளை அடுத்து நேற்று நண்பகல் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு உறவுகளுடன் இணைந்துள்ளதாக, குடும்பத்தினர் குரலற்றவர்களின் குரல் அமைப்பிற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!