வவுனியா, மன்னாரில் இருந்து குடாநாட்டில் குவிக்கப்படும் சிறிலங்கா காவல்துறையினர்

யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை அடுத்து, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து மேலதிக காவல்துறையினர், அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ். குடாநாட்டில் அண்மைய நாட்களாக வாள்வெட்டுகள், பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், கொள்ளைகள் போன்ற சமூக குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.

இதனால் குடாநாட்டில் பொதுமக்கள் மத்தியில் அச்சமும், சிறிலங்கா அரச தரப்பின் மீது கடும் வெறுப்பும் ஏற்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தவறி விட்டதாக, தமிழ் அரசியல் பிரமுகர்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், நேற்று திடீரென, யாழ். மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து காவலர்களினதும் விடுமுறைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இரண்டு வாரங்களுக்கு இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று வடக்கு மாகாண மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் றொசான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் யாழ். குடாநாட்டில் பாதுகாப்பைப் பலப்படுத்த மேலதிக காவல்துறையினர் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து 100 காவல்துறையினர் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், நிலைமைகளை நேரில் ஆராய்வதற்கு, காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர நாளை மறுநாள் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!