இராணுவ தளபதி அல்ல எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்: சரத் பொன்சேகா சூளுரை

11 அப்பாவி பிள்ளைகளை கடத்திச் சென்று கப்பம் கோரி, அது கிடைக்காததால், அந்தப் பிள்ளைகளை கொலை செய்திருந்தால், இராணுவ தளபதியல்ல எவராக இருந்தாலும் கட்டாயம் தண்டனை கிடைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(Sarath fonseka) தெரிவித்துள்ளார்.

இந்த 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட போது வசந்த கரன்னாகொட கடற்படை தளபதியாக இருந்தால், நான் அந்த காலத்தில் இராணுவத்திற்கு கட்டளைகளை வழங்கினாலும் இப்படியான அநியாயங்களை செய்ய அனுமதிக்கவில்லை.

இவ்வாறான செயல்களை செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேன். கரன்னாகொடவுக்கு விடுதலை வழங்கப்பட்டாலும் வழக்கு திரும்பபெறப்பட்டாலும் தனிப்பட்ட ரீதியில் அதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

படைத்தளபதியாக இருந்தாலும் வேறு ஒருவராக இருந்தாலும் குற்றம் செய்திருந்தால், அந்த நபருக்கு கட்டாயம் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நலன் அறிய, அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள அங்குகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு சென்றிருந்த போது, செய்தியார்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பொன்சேகா இதனை கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!