நியூயோர்க் ரைம் செய்தி – அவசர செய்தியாளர் சந்திப்புக்கு சீன தூதரகம் அழைப்பு

மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக்கு, சீனா நிதி அளித்தது என்று நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்டிருந்த செய்தியை அடுத்து, கொழும்பில் உள்ள சீன தூதரகம் அவசர செய்தியாளர் சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இன்று இந்த அவசர செய்தியாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது, கொழும்பில் உள்ள குறிப்பிட்ட சில உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள சீனத் தூதரக அதிகாரிகள், தமது தூதரகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ஆசன வசதிகளே இருப்பதால் எல்லா ஊடகங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, கடந்த காலங்களில் சீனத் தூதரகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்புகளில், அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவில் சீனாவின் நற்பெயருக்கு மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தவே, தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!