நாளுக்கு நாள் நாடு மோசமான நிலைமை நோக்கி நகர்கின்றது! கஜேந்திரகுமார் எம்.பி.

சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றால் இன்று சிறைகளில் பயங்கரவாத தடை சட்டத்தில் எவரும் சிறைப்படுத்தப்பட்டிருக்க மாட்டார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

ஆனால், நாட்டில் நீதித்துறையினால் நீதி நிலைநாட்டப்படுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இளந்தவறாளர்கள் (பயிற்சிப்பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,

நீதி அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) இங்கு கொண்டுவந்துள்ள சட்டமூலங்கள் பகுதி பகுதியாக முன்வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக குற்றவியல் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் தனித்தனியாகவே முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே, திருத்தங்களை இவ்வாறு முன்னெடுப்பது கடினம்.இது குழப்பங்களையும் ஏற்படுத்தும். ஒரு சில சந்தர்ப்பங்களில் சட்டங்களை சவாலுக்கு உட்படுத்தும்.

இவ்வாறான வேளையில் எம்மாலும் பல காரணிகளை தவறவிட நேரிடும். இங்கு தண்டனை சட்டக்கோவையில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன, அதனை நாம் வரவேற்கிறோம், ஆனால் மரண தண்டனை குறித்து ஏன் இறுக்கமான தீர்மானம் எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகின்றது.

இந்த நாட்டில் 1976ஆம் ஆண்டு தொடக்கம் மரண தண்டனை தடுக்கப்பட்டுள்ளது. ஏதேனும் காரணிகளை கொண்டு இது தடுக்கப்படுகின்றது. அப்படியென்றால் ஏன் இதனை முழுமையாக நீக்க முடியாது? நல்லாட்சி அரசில் இது குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்ட வேளையிலும் கூட அவை இறுதிப்படுத்தப்படவில்லை.

அதுமட்டும் அல்ல, மரண தண்டனை குற்றங்களை குறைக்காது என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். மரண தண்டனை இந்த நாட்டில் குற்றங்களை குறைத்ததாக எங்கும் உறுதிப்படுத்தப்படவில்லை.

விஞ்ஞானபூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை. எனவே, இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு நீதி அமைச்சரைக் கோருகின்றோம். இதேவேளை, நீதித்துறையில் நீதியை நிலைநாட்டுவதில் பாரிய பின்னடைவு உள்ளது.

இந்த அரசை மட்டுமல்ல இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த சகல அரசுகளையும் நான் குறிப்பிட விரும்புகின்றேன். நீதித்துறையில் விடுபாட்டு நிலைமையே அதிகமாக உள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் பொறிமுறையில் விடுபாட்டு நிலைமையே காணப்படுகின்றது.
அண்மையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளுக்கு எதிராக ஒரு இராஜாங்க அமைச்சர் செயற்பட்ட விதம் குறித்து சாட்சியங்கள் இருந்தும் அவரது அமைச்சுப் பதவி பறிபோகவில்லை. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இது ஒன்றே இதற்கு நல்ல உதாரணம். குற்றவாளியென அடையாளப்படுத்தும் அந்த இராஜாங்க அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அதாவது அவர் எமக்கு விசுவாசமான நபர் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றால் இன்று சிறைகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் எவரும் சிறைப்படுத்தப்பட்டிருக்க மாட்டார்கள்.

ஒரு தனி நபர் கூட இருக்க மாட்டார். ஆகவே, வெறுமனே சட்ட விடுபாட்டு நிலைமையையே இது வலியுறுத்திக் கொண்டுள்ளது. நாளுக்கு நாள் இந்த நாடு மிக மோசமான நிலைமை நோக்கி நகர்கின்றது என தெரிவித்துள்ளனர். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!