33 ஆண்டுகளாக பாம்பு விஷத்தை தனது உடலுக்குள் செலுத்தி வரும் நபர்: சொன்ன காரணம்!

லண்டனை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 33 ஆண்டுகளாக பாம்புகளின் விஷத்தை ஊசி மூலம் தனது உடலுக்குள் செலுத்தி வருவது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் பொழுதுபோக்காக தபால்தலைகளை சேகரிப்பார்கள், சிலர் புத்தகம் படிப்பார்கள். ஆனால் லண்டன்வாசியான ஸ்டீவ் லுட்வின் (55) பாம்பு விஷத்தை ஊசி மூலம் தனது மூட்டுகளில் செலுத்தி வலியை உண்டாக்கி கொள்வது அவருக்கு பிடித்தமான பொழுதுபோக்காக உள்ளது.
    
உலகில் உள்ள ஏழை நாடுகளில் வசிக்கும் மக்கள் பலர் பாம்பு கடியை சந்திக்கும் நிலையில் அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் அவர் அவ்வாறு செய்கிறார்.

கடந்த 33 ஆண்டுகளாக 10 நாட்களுக்கு ஒருமுறை இப்படி விஷத்தை ஊசி மூலம் செலுத்தி கொள்கிறார் லுட்வின். லுட்வின் 1988 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பாம்பின் விஷத்தை ஊசி போடத் தொடங்கினார். அது சாத்தியமா என்று பார்க்க 1948 லிருந்து அதைச் செய்து கொண்டிருந்த ஒருவரைச் சந்தித்த பிறகே செயல்படுத்த தொடங்கினார்.

தனது பொழுதுபோக்கின் உச்சமாக தனது வீட்டின் ஒரு அறையில் நாகப்பாம்புகள் மற்றும் ராட்டில்ஸ்னேக்ஸ் உட்பட 33 விஷ பாம்புகளை லுட்வின் வைத்துள்ளார்.

அமெரிக்காவில் பிறந்த லுட்வின் தனது பள்ளி பருவம் முடிந்ததும் லண்டனுக்கு வேலை தேடி வந்தார். அவருக்கு அங்கு மிருகக்காட்சிசாலைகள் மற்றும் ஆய்வகங்களுக்கு விலங்குகளை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கிருந்து தான் அவருக்கும் இந்த விஷங்களின் மீது ஆர்வம் வந்தது.

லுட்வின் கூறுகையில், பெரிய மருந்து நிறுவனங்கள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவைப் பற்றி பாம்பு கடி விடயங்களில் கவலைப்படுவதில்லை இது அங்கு தீவிரமான பிரச்சினையாக உள்ளது. முக்கியமாக ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் சுமார் 155,000 பேர் ஒவ்வொரு ஆண்டும் பாம்பு கடித்தால் தேவையில்லாமல் இறக்கிறார்கள்.

மேலும் அரை மில்லியன் பேர் பாம்பு கடியால் தங்கள் கைகால்களை இழக்கிறார்கள். பாம்பு விஷத்தை ஊசி மூலம் செலுத்தும் போது முதல் 15 நிமிடங்களுக்குள் என் உடலில் வீக்கம் ஏற்படும்.
இது நம்பமுடியாத அளவிற்கு வேதனையான வலியை தரும், பலமுறை இதன் காரணமாக உயிர்போகும் நிலைக்கு சென்று வந்திருக்கிறேன். என்னுடைய இந்த பொழுதுபோக்கு மிகவும் ஆபத்தானது என்பதை உணர்ந்துள்ளேன்.

ஊசி போடுவதற்கு என்னிடம் சில வித்தியாசமான நுட்பங்கள் உள்ளன, அது உங்கள் நரம்புகளுக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டியது அவசியமாகும். இதை வேறு யாரும் செய்ய நான் ஊக்குவிக்கவில்லை, உடல் முழுவதும் துளைகள் மற்றும் வடுக்கள் உள்ளது என கூறியுள்ளார்.

அவர் இப்படி ஊசி போட்டு கொள்வது பல மருத்துவ நிபுணர்களை ஈர்த்துள்ளது. கோவிட் தடுப்பூசியை உருவாக்க பாம்பு விஷம் பயன்படுத்தப்படலாம் என்ற நம்பிக்கையும் லுட்வினுக்கு உள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!