அழைப்பை புறக்கணித்த 52 உறுப்பினர்கள்! கோட்டாபய எடுத்துள்ள திடீர் முடிவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆளும் கட்சியில் அங்கம் வகித்து கொண்டே கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு இந்த சந்திப்பு நடாத்தப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

யுகதனவி மின்நிலையத்தின் பங்குகள் அமெரிக்காவிற்கு விற்பனை செய்வதனை எதிர்த்து குரல் கொடுத்து வரும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையே ஜனாதிபதி இவ்வாறு சந்திக்க உள்ளார்.

இன்றைய சந்திப்பில் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்கள் இவ்வாறு ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யுகதனவி விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்கில் ஜனாதிபதியை சந்திக்க கிளர்ச்சி குழுவினர் முயற்சித்த போதிலும் அதற்கு ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஜனாதிபதியை அவர்கள் சந்திப்பதற்கான நேரத்தினை ஒதுக்கித்தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவையும் சந்தித்துப் பேசுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதில் வழங்கியிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இதற்கிடையில், ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்காமையை தொடர்ந்து இந்தக் குழுவினர் நாளை குறித்த மின் நிலையம் தொடர்பில் பொதுமக்களை தெளிவூட்டும் நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடு செய்திருந்தனர் என்பதும் நினைவூட்டத்தக்கது.

இதேவேளை, கடந்த 24ஆம் திகதி ஜனாதிபதியின் அழைப்பை 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்து கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதும் இங்கே அவதானிக்கத்தக்கது.
இச்சூழ்நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய இந்த திடீர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!