கனடாவில் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக துருவக் கரடியிடம் போராடி பலியான தந்தை!

கனடாவின் Nunavut பகுதியில் தனது குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக துருவக் கரடியிடம் போராடி தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீன் பிடிப்பதற்கும் வேட்டையாடுவதற்கும் புகழ்பெற்ற இடமான Sentry தீவிற்கு நேற்று முன்தினம் தனது மகள்களுடன் சென்றிருந்தார் Aaron Gibbons (31).

தனது மகள்களுடன் இன்பமாக நாளைக் கழித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த துருவக்கரடி ஒன்று அவரது மகள்களில் ஒருவரைத் தாக்க முற்பட்டது. உடனே தனது மகள்களை ஓடச் சொல்லி விட்டு அவர்களுக்கும் கரடிக்கும் நடுவில் நின்றார் Aaron. குழந்தைகளைக் காப்பாற்றி விட்ட நிலையில் கரடி அவரை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது மகள்களில் ஒருத்தி படகிலிருந்த ரேடியோவில் உதவி கோரினாள். அதைக் கேட்ட அவளது உறவினர் ஒருவர் ரேடியோவில் அவளது குரலைக் கேட்டதாகவும் அதைக் கேட்பதற்கு மிகவும் பயங்கரமாக இருந்ததாகவும் தெரிவித்தார். தனது மகள்களுக்காக தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கரடியுடன் போராடிய அவர் ஒரு ஹீரோ என்றார் அவர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!