பாங்காக்கில் பெண்ணின் செயலால் பேராபத்தில் இருந்த மூவர்: நூலிழையில் காப்பாற்றிய நபர்!

பாங்காக்கில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர், கட்டிடத்தின் விரிசலை சரிசெய்து கொண்டிருந்த சாயம் அடிப்பவர்கள் தொங்கிக்கொண்டிருந்த ஆதரவு கயிற்றை அறுத்துள்ளார். அவர்கள் பழுதுபார்க்கும் வேலையைச் செய்ய வருவார்கள் என்று அவளுக்குத் தெரிவிக்கப்படாததால் கோபத்தில் இப்படி ஒரு காரியத்தை அவர் செய்துள்ளார்.

    
32-வது மாடியில் இருந்து சுவருக்கு சாயம் அடிப்பவர் 3 பேர் கயிற்றைக் கட்டி கீழே இறங்கியுள்ளனர். அவர்கள் 30-வது மாடியை அடைந்தபோது, ​​கயிறு கனமாக இருந்ததை உணர்ந்த ஒருவர், கீழே பார்த்துள்ளார்.

அப்போது, ​​21-வது மாடியில் இருந்த ஒருவர் ஜன்னலை திறந்து, கயிற்றை அறுத்துக்கொண்டு இருப்பதை அவர் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

நல்லவேளையாக அந்த சமயத்தில், 26-வது மாடியில் வசிக்கும் Praphaiwan Setsing என்பவர் அவர்களை ஜன்னல் வழியாக தனது வீட்டுக்குள் அனுமதித்து அவர்களைக் காப்பாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, கயிற்றை அறுத்த பெண் மீது, கொலை மற்றும் சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

34 வயதான அப்பெண் முதலில் கயிறு வெட்டப்பட்டதை மறுத்துள்ளார். இருப்பினும், துண்டிக்கப்பட்ட கயிற்றை கைரேகை மற்றும் டிஎன்ஏ பகுப்பாய்வுக்காக பொலிஸார் அனுப்பியபோது, ​​அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அப்பெண் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டாலும், கொலை முயற்சி குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!