இந்தியாவில் ‘ஏஒய் 4.2’ வகை கொரோனா: 17 பேர் பாதிப்பு!

உருமாறிய புதிய வகை கரோனா வைரஸான ஏஒய் 4.2 வகை 42 நாடுகளில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் பல்வேறு வகைகளில் உருமாறி வருகிறது. அந்தவகையில், தற்போது உருமாறிய புதிய வகை கரோனா வைரஸான ஏஒய் 4.2 வகை பிரிட்டனில் அதிகமாகப் பரவி வருகிறது.

இந்தியாவிலும் ஆந்திரத்தில் 7 பேர், கேரளத்தில் 4 பேர், தெலங்கானா மற்றும் கர்நாடகத்தில் தலா இருவர், மகாராஷ்டிரம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தலா ஒருவர் என 17 பேருக்கு இந்த புதிய வகை கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மொத்தமாக 42 நாடுகளில் ஜூலை 21 முதல் அக்டோபர் 25 வரை 26,000 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதில், 93% பாதிப்பு பிரிட்டனில் ஏற்பட்டுள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. மேலும் ஜெர்மனி, போலந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் புதிய வகை கரோனா பாதிப்பு உள்ளது.

டெல்டா வகை கரோனாவைவிட ஏஒய் 4.2 வகை கடும் பாதிப்பைக் கொண்டது என்று கணிக்கப்பட்டுள்ளது. புதிய வகை கரோனா குறித்து பிரிட்டனில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!