வெடுக்குநாறி மலையில் பௌத்த விகாரையின் சிதைவுகளே உள்ளது!

நெடுங்கேணி – வெடுக்குநாறி மலையில் அண்மைக்காலமாகவே இந்துக் கோவில் என்ற வகையில் பூசைகள் இடம்பெற்று வருகின்றன. முன்னர் பௌத்த விகாரைகளின் சிதைவுகளே அங்கு காணப்பட்டதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க தெரிவித்தார்.

வவுனியாவிற்கு விஜயம் செய்த அவர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

“ நெடுங்கேணி வெடுக்குநாறி மலை தொடர்பான விடயம் நீதிமன்றில் இருக்கின்றது.எனவே அந்த பிரச்சினையில் நாம் ஏனைய பணிகளை செய்ய முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது.
ஆயினும் ஒலிபெருக்கியினை பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்தினை நாம் வழங்கியிருந்தோம்.ஆனால் அதிலும் சில இடைஞ்சல்கள் ஏற்பட்டிருப்பதை எங்களால் காணக்கூடியதாக இருக்கின்றது.அது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்று நாங்கள் சொல்ல வேண்டும்.

குறிப்பாக அண்மைக் காலமாகவே இந்துக் கோவில் என்ற வகையில் அங்கு பூசைகள் இடம்பெற்று வருவதாக எம்மால் அறிய முடிகின்றது.இதற்கு முன்னர் பௌத்த விகாரைகளின் சிதைவுகள் அங்கு காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இது ஒரு முக்கியத்துவமான பிரச்சினை என்ற வகையில் இனங்களிற்கிடையே பிளவை ஏற்படுத்தக் கூடாத வகையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் வண்ணம் இந்த விடயத்தை பார்க்கவேண்டும்.அந்த வகையில் இது தொடர்பில் அவதானம் எடுத்து பொது மக்களுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கான ஒழுங்குகளை நாம் செய்வோம்.

இலங்கையில் எந்த ஒரு பிரதேசத்திற்கும் சென்று குடியிருப்பதற்கான தகுதி ஒவ்வொரு நபருக்கும் இருக்கின்றது. அதில் எந்தத் தடையும் இல்லை.இங்கு முன்னெடுக்கப்பட்ட அகழ்வுகள் மூலம் பௌத்த விகாரை இருந்திருப்பதற்கான எச்சங்களை நாம் காண்கின்றோம்.அதேபோல் இந்து சமயத்திற்குரிய சில விடயங்களையும் அங்கு காண்கின்றோம். இலங்கையில் பௌத்த விகாரைகள் அமையப் பெற்றுள்ள இடங்களில் இந்துக் கடவுள்களுக்கான பூசைகளும் இடம்பெற்று வருவதை அனைவரும் அறிவீர்கள்.

எனவே அவ்வாறு இன ஐக்கியத்தோடு இருக்கும் நடைமுறைகளையும், செயற்பாட்டையும் எதிர்காலத்தில் நாங்கள் ஏற்பாடு செய்வோம்.அந்த பிரதேசத்திற்குள் பிரவேசிப்பதனை தடுக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.இந்த சந்தர்ப்பத்தில் அடாத்தான கட்டிட நிர்மாணங்கள் அங்கு ஏற்படுத்தப்படுகின்றமை தடை செய்யப்பட வேண்டிய ஒரு விடயம்.

அத்துடன் அந்தப் பிரதேசத்தில் இருக்கக்கூடிய புராதன சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. குறிப்பாக தொல்பொருட் திணைக்களம் என்ற வகையில் அந்த பொறுப்பு எமக்கிருக்கின்றது.அதற்காகவே இந்த தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றனவே தவிர, இனிவரும் காலங்களில் முழுமையான ஏற்பாடுகளும் சீர்செய்யப்படும் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!