மகன் கண்முன் பறிபோன தாயின் உயிர்: நெஞ்சை உறையவைக்கும் சம்பவம்!

நின்ற லாரி மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் மகன் கண் முன் தாயார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரிச்சிபாளையம் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு வைஷ்ணவ் என்ற மகன் உள்ளார்.
    
இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது மகன் வைஷ்ணவுடன் பத்மாவதி ஸ்கூட்டரில் காடையூரில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஸ்கூட்டரை பத்மாவதி ஓட்டினார். அதன் பின் இருக்கையில் அவருடைய மகன் வைஷ்ணவ் அமர்ந்துள்ளார். இந்நிலையில் பத்மாவதி திருப்பூர்-தாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் டாரஸ் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

அந்த லாரியில் இருந்த சிமெண்ட் மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டது. அப்போது பத்மாவதி ஓட்டி வந்த ஸ்கூட்டர் எதிர்பாராதவிதமாக லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பத்மாவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் பின்னால் அமர்ந்து வந்த மகன் வைஷ்ணவ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து வினாசிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வைஷ்ணவை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் பத்மாவதியின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!