விமர்சனங்களை முன்வைக்கும்போது, சமூக மத நம்பிக்கைகளை எதிர்க்கட்சியினர் மதிக்க வேண்டும் -அங்கஜன் வலியுறுத்தல்…!

நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் “நந்தி ஒழிக” எனும் பதாகையை ஏந்தி எதிர்க்கட்சியினர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதன் மூலம் இந்துக்கள் அவமதிக்கப்பட்டுள்ளதாக அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலேயே இதனை கூறியுள்ளார்.

இந்த நிலையில், நந்தி என்பது இந்துக்களின் கொடியில் உள்ள அடையாளம் என்பதோடு, இந்துக்களின் வழிபாட்டுக்குரிய தெய்வமாகவும் விளங்குவதாக அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நந்திக்கொடியானது யாழ்ப்பாண இராச்சியத்தின் கொடி என்பதையும் எதிர்க்கட்சியினர் அறிந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆகவே, இந்துக்களினதும், தொன்மையான யாழ்ப்பாண இராச்சியத்தினதும் அடையாளத்தை அவமதிக்க வேண்டாம் என, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், விமர்சனங்களை முன்வைக்கும்போது, சமூக மத நம்பிக்கைகளையும், புனித அடையாளங்களையும் மதிக்க வேண்டும் என்பதை எதிரணியினர் கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், குறித்த பதாகையை தயாரித்தவர்களும், அதை தாங்கியவர்களும் இச்செயலுக்காக இந்துக்களிடமும், தமிழர்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!