மக்களை மக்களே ஆளும் அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் – சம்பந்தன்

ஜனநாயகத்தை பலப்படுத்த அதிகார பரவலாக்கல் உறுதிப்படுத்தப்பட்டு, மக்களை மக்களே ஆளும் அதிகாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

பாராளுமறத்தில் இன்று மாகாணசபை தேர்தல் குறித்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பிளவடையாத நாட்டுக்குள் அரசியலமைப்பின் மூலமாக அதிராக பரவலாக்கல் ஒன்றினை பெற்றுக்கொண்டு அதன் மூலம் சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்பதை நாம் உறுதியான கோரிக்கையாக வலியுறுத்தி வருகின்றோம்.

கடந்த கால தவறுகளிலிருந்து படிப்பினை பெற்றுக்கொண்டு அடுத்த கட்ட ஆரோக்கியமான நகர்வுகளை நாம் முன்னெடுக்க வேண்டும். புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்காது விட்டால் நாட்டுக்கு எந்த விடிவுகளும் இல்லை. தீர்வுகளுக்கும் முன்னேற்றங்களுக்கும் புதிய அரசியல் அமைப்பு ஒன்று அவசியம். இதையே நாம் ஆரம்பத்திலிருந்து தெரிவித்து வருகின்றோம்.

இது குறித்து சிந்தித்து இறுதித் தீர்வொன்று பெறப்படுவது குறித்து ஏன் சிந்திக்காது உள்ளீர்கள். பிளவுபடாத நாட்டுக்குள் நிரந்தரத் தீர்வு ஒன்று எமக்கு வேண்டும். மாகாணசபைகள் உயிரோட்டம் உள்ளதாக அமைய வேண்டும். மாகாண அரசு, மாகாண ஆட்சி அமையப்பெற வேண்டும்.

ஆகவே மாகாண சபைத் தேர்தல்கள் நடத்துவதற்கு முன்னர் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு சபைக்கு புதிய அரசியல் அமைப்பினை கொண்டவர வேண்டும். மாகாணசபை முறைமைகள், அதிகார பரவலாக்கல், அதியுச்ச அதிகார பகிர்வு அரசியல் அமைப்பில் உறுதிப்படுத்தபட வேண்டும். தேர்தல்கள் காலதாமதம் இல்லாது இடம்பெற வேண்டும். மக்களின் ஜனநாயகம் பலமடைய வேண்டும். அதன் மூலமாக மக்களே தம்மை ஆளும் ஜனநாயக சூழல் பலமடைய வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!