ஐ.நா உதவிச் செயலாளருக்கு அமைச்சர் பீரிஸ் விளக்கம்!

பயங்கரவாத தடைசட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் உட்பட , நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக உள்நாட்டு செயன்முறைகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றம் தொடர்பில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளரிடம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
    
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் காலித் கியாரி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்து கலந்துரையாடிய போதே இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது தொற்று நோய்க்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார சவால்கள் மற்றும் இலங்கையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் உள்ளிட்ட இலங்கையின் கெரிட் தொற்று நோய்க்கு பிந்தைய மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் குறித்து அமைச்சர் கலந்துரையாடினார்.

பயங்கரவாத தடைசட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் உட்பட , நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக உள்நாட்டு செயன்முறைகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர் , உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீள உறுதிப்படுத்தினார்.

இலங்கை தாமதமாக முன்வந்து ஏற்றுக் கொண்ட சர்வதேச கடமைகளுக்கு அமைவாக , நிலையான சமாதானத்தையும் அபிவிருத்தியையும் அடைந்து கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைக்கும் என்றும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

உதவி செயலாளர் நாயகம் கியாரியுடன் ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் மற்றும் ஏனைய ஐ.நா. அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!