ஜாவத் புயல் எதிரொலி: தமிழக துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிய நிலையில், இது நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின் புயலாக மாறும் எனவும் கூறப்பட்டது.

அதன்படி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது இன்று அதிகாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது தற்போது மேலும் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் ஜாவத் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் நாளை வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா அருகே கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளதால் ஒடிசா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

இதன் எதிரொலியால், தமிழகத்தில் உள்ள எண்ணூர், கடலூர், நாகை, தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பாம்பன், புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!