சியால்கோட் சம்பவம் தனிமையானது!

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவமானது, மத அடிப்படைவாதத்தை அடிப்படையாக கொண்டிராத, ஒரு இடத்தில் நடந்த தனிமையான சம்பவம் என இராணுவ தளபதி ஜெனரால் சவேந்ர சில்வா குறிப்பிட்டார்.
    
எனவே பாகிஸ்தானில் வசிக்கும் ஏனைய இலங்கையர்களோ அல்லது வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களோ வீணாக, அச்சம்பவத்தை மையப்படுத்தி அச்சம் கொள்ளத் தேவை இல்லை என அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் சட்டத்தை கடுமையாக அமுல் செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ள நிலையில், இலங்கையர்களாகிய நாம் அறிவுபூர்வமாக நடந்துகொள்ளும் தேசத்தவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்த இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தலதா மாளிகையில் வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர், மேற்படி விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

‘ இந்த சம்பவம் மிகக் கொடூரமானது. மிலேச்சத்தனமானது. இது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கலந்துரையாடியுள்ளனர்.

அத்துடன் பாகிஸ்தானின் முப்படைத் தளபதி தொலைபேசியில் என்னுடன் கலந்துரையாடினார். இந்த சம்பவம் தொடர்பில் தற்போதும் 200 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு உச்ச பட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அந் நாடு இருப்பதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார்.’ என இராணுவ தளபதி ஜெனரால் சவேந்ர சில்வா கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!