வலுவிழந்த ஜாவத் புயல்: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இந்தநிலையில் இம்மாத ஆரம்பத்தில் இருந்து மழை சற்று குறையத் தொடங்கி இருக்கிறது.
    
அதன்படி, இன்று (திங்கட்கிழமை) தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய உள்மாவட்டங்களில் (திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி) சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை (செவ்வாய்க்கிழமை) தென் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும், அதுதவிர பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையும் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மிதமான மழைக்கு வாய்ப்பு
நாளை மறுதினம் (புதன்கிழமை) கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், 9-ந் தேதி (வியாழக்கிழமை) கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய உள்மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்க கடலில் நிலவிவந்த ஜாவத் புயல், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு இழந்திருந்த நிலையில், அது மேலும் வலு குறைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒடிசா கடற்கரையோரம் நிலைகொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மழை அளவு
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொடுமுடி, ஆணைபாளையம் தலா 9 செ.மீ., கோவை 7 செ.மீ., எட்டயபுரம் 6 செ.மீ., நாங்குநேரி, மோகனூர், வெம்பக்கோட்டை, சின்னக்கல்லாறு தலா 5 செ.மீ., பஞ்சப்பட்டி, பூதப்பாண்டி, வீரபாண்டி, சிவகாசி, உடுமலைப்பேட்டை தலா 4 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்திருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!