வழக்குகளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபரிடம் வலியுறுத்தல்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளையும் துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி அரசியல்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் சட்டமா அதிபரிடம் கடிதமொன்றைக் கையளித்துள்ளார்.
    
ஊடக சந்திப்பொன்றினை நடத்தி இன, மதபேதங்களைத் தோற்றுவிக்கக்கூடிய வன்மத்தைத் தூண்டும் வகையிலான கருத்து வெளியிட்டதாகக்கூறி மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத்தடைச்சட்டம் உள்ளடங்கலாகப் பல்வேறு சட்டங்களின்கீழ் தொடுக்கப்பட்ட வழக்கின் அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவர் கடந்த வியாழக்கிழமை கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் விடுதலைசெய்யப்பட்டார்.

இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் அவர்களைப் பாதுகாப்பதற்காகக் குரலெழுப்புதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அருட்தந்தை சக்திவேலினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அமைப்பின் சார்பிலேயே மேற்படி கடிதம் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட அருட்தந்தை சக்திவேல் கூறியதாவது:
பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழான வழக்கு விசாரணைகளைத் துரிதமாக முன்னெடுப்பதற்கும் அச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கும் அவர்களுக்குப் பிணை வழங்குவதற்குமான அதிகாரம் சட்டமா அதிபருக்கு உள்ளது.

பயங்கரவாத்தடைச்சட்டத்தின்கீழ் வழக்குத் தொடரப்பட்ட மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி வெறுமனே 8 மாதகாலத்திற்குள் விசாரணைகள் முடிவடைந்து நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டமையை அதற்கான மிகச்சிறந்த உதாரணமாகக் கூறமுடியும்.

ஆனால் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட பெரும் எண்ணிக்கையான அரசியல்கைதிகள் பலவருடங்களாக வழக்கு விசாரணைகளின்றித் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அதேபோன்று கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களை அடுத்து, அதனுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பெருமளவானோர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்கள்.

ஆகவே இன, மத, மொழி பேதங்களின்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு வழக்கு விசாரணைகளின்றி நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்போரின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கிலேயே சட்டமா அதிபரிடம் இந்தக் கடிதத்தைக் கையளித்திருக்கின்றோம்.

அக்கடிதத்திலேயே பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படுபவர்கள் தொடர்பில் சட்டமா அதிபர் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள், இச்சட்டத்தின் மீளாய்வு குறித்து சர்வதேசத்திற்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் மற்றும் அதன் பிரயோகத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியிருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!