காணிக்கான போராட்டமே இனப்பிரச்சினையின் அடிப்படை: மனோ கணேசன்

திடீரென ஒரு அரசு, ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து, நாட்டில் பாரம்பரியமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமைகளை தலைகீழாக மாற்றிப்போட முடியாது. ஆகவேதான் இனப்பிரச்சினை தீராமல் தொடர்கிறது எனத் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
“எமது காணி, எமது உயிராகும்” என்ற தலைப்பில் காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி, மக்கள் காணி ஆணைக்குழு, கொழும்பு குளோபல் விடுதியில் நடத்திய கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
1964 சிறிமா சாஸ்திரி உடன்பாட்டில் இலங்கை-இந்திய அரசுகள் மலையக மக்களை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தி விட்டன. ஆனாலும், இலங்கை குடியுரிமை பெற்ற மலையக மக்களுக்கு, ஏனைய இலங்கையருக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் வழங்க இலங்கை அரசு உடன்பட்டது.
ஆனால், இன்று ஏனைய இலங்கையருக்கு உள்ள காணி உரிமை, தோட்டங்களில் வாழும் மலைநாட்டுத் தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகிறது. அதேபோல், வடகிழக்கில் பண்டா-செல்வா, டட்லி-செல்வா உடன்பாடுகளில் வழக்கு, கிழக்கு மாவட்டங்களில் எப்படி காணி பிரித்து வழங்கப்பட வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

இம்மாவட்டங்களில், அரச குடியேற்றத் திட்டங்களில், காணி பிரித்து வழங்கப்படும் போது, அந்த மாவட்டத்தில் நிரந்தரமாக வசிக்கும் மக்களுக்கும், அடுத்து அம்மாவட்டத்தை அடுத்த மாவட்ட நிரந்தர விதிவாளருக்கும், அதையடுத்து நாட்டின் ஏனைய மாவட்டங்களில் வசிக்கும் தமிழ் பேசுகின்ற மக்களுக்கும், முன்னுரிமைகள் வழங்க வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமை. இது இன்று மீறப்படுகிறது.

திடீரென ஒரு அரசு நாட்டில் பாரம்பரியமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமைகளை தலைகீழாக மாற்றிப்போட முடியாது. ஆகவேதான் இனப்பிரச்சினை தீராமல் தொடர்கிறது. காலத்துக்கு மிகவும் அவசியமான முற்போக்கான செயற்பாட்டை, இந்த காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி செய்கிறது.

எமது பாராட்டுகள். நாம் முழுமையாக உங்களுடன் ஒத்துழைப்போம். மலையக மக்களுக்கு இரண்டு காரணங்களுக்காகக் காணி தேவை. ஒன்று, வீடு கட்டி வாழக் காணி தேவை. அடுத்து, விளைநில வாழ்வாதார காணி தேவை. அதை இங்கே இந்த மக்கள் ஆணைக்குழுவின் ஒரு ஆணையாளர் கணேசலிங்கம் கணேஷ் மிகச் சரியாகச் சொன்னார்.

இந்த உரிமைகள் எமக்கு இன்று மறுக்கப்படுகின்றன. அல்லது, பெரும்பான்மை மக்களுக்குத் தோட்ட காணிகள் பிரித்து வழங்கப்படுவது போன்று எமது மக்களுக்கு வழங்கப்படாமல் பாராபட்சம் காட்டப்படுகின்றன. இதை நாம் அனுமதிக்க முடியாது. அதேபோல், 1987ல், வந்த 13ம் திருத்தத்திலும் காணி உரிமை தொடர்பாகக் கூறப்பட்டுள்ளது.

திடீரென ஒரு அரசு, ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து, நாட்டில் பாரம்பரியமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமைகளை தலைகீழாக மாற்றிப்போட முடியாது. இது எமக்கு முன்னுள்ள உணர்வுப்பூர்வமான பிரச்சினை. ஆகவே, இன்றைய அரசு தனது எதேச்சதிகார போக்கில் தமிழ் மக்களின் காணி உரிமைகளை மறுக்க முடியாது. நாம் எமது காணி நில உரிமைகளைப் பெற, பாதுகாக்க உறுதி பூண்டுள்ளோம்.

இந்த அமைப்பு முழு நாட்டுக்கும் அவசியமான நியாயமான காணி கொள்கையை உருவாக்கும் நோக்கில் உழைக்க வேண்டும். நாம் உங்களுடன் முழுமையாக ஒத்துழைத்துச் செயற்படத் தயாராக உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!