வசந்த கரன்னகொடவுக்கு ஆளுநர் பதவி – மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு!

பதினொரு பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கில் தொடர்புபட்டிக்கக் கூடிய வசந்த கரன்னாகொட அதற்காக சிறையில் இருக்கவேண்டுமே தவிர, உயர் அதிகாரத்தை வழங்கும் பதவிகளுக்கு நியமிக்கப்படக்கூடாது என்று சுட்டிக்காட்டியுள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் காண்பித்துவரும் அலட்சியப்போக்கை இந்த நியமனம் தெளிவாக வெளிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
    
கடந்த 2008 ஆம் ஆண்டில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 பேர் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு ட்ரயல் அட்பார் விசேட நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கில் 14 ஆவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத்தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட வியாழக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரண அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கின்றார்.
பதினொருபேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கில் தொடர்புபட்டிக்கக்கூடிய வசந்த கரன்னாகொட அதற்காக சிறையில் இருக்கவேண்டுமே தவிர, உயர் அதிகாரத்தை வழங்கும் பதவிகளுக்கு நியமிக்கப்படக்கூடாது என்று அவர் அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இதுபற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான பவானி பொன்சேகா, ‘இவ்வருட சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் இலங்கையைப் பொறுத்தமட்டில் குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பிப்பது மாத்திரமன்றி, அவர்களுக்கு முக்கியமான உயர்பதவிகளும் வழங்கப்படும் என்ற விடயம் நினைவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி இந்த நியமனம் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு மற்றும் அதிகரித்த இராணுவமயமாக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்தியிருப்பதுடன் அரசியல் ரீதியான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் காண்பித்துவரும் அலட்சியப்போக்கு குறித்த தெளிவான செய்தியையும் வழங்கியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டமை தொடர்பில் கனேடி தமிழர் தேசிய அவை என்ற அமைப்பு அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழர் இனப்படுகொலை தொடர்பில் நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையிலும் கடந்த 2008 ஆம் ஆண்டு 11 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவத்திலும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கக்கூடிய முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட ஜனாதிபதியினால் வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடா உள்ளடங்கலாக ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலைகள், மனிதகுலத்திற்கு எதிரான மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு எதிராக பயணத்தடை விதிப்பதுடன் அவர்களது சொத்துக்களையும் முடக்கவேண்டிய தருணம் இதுவாகும்.

தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு இலங்கையில் விரிவடைந்து வருவதுடன் போர்க்குற்றங்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நாட்டின் உயர்பதவிகளுக்கு நியமிக்கப்படுவதுடன் சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர ரீதியான பதவிகளுக்கும் நியமிக்கப்படுகின்றார்கள்.

இதன்மூலம் இனப்படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுக்களை மூடிமறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அப்பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!