கடற்கரையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை!

தமிழகத்தில் கொரோனா பாதிக்கத் தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இடையில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
   
இந்த நிலையில், தற்போது வீரியமிக்க கொரோனா வகைகளில் ஒன்றான ஒமைக்ரான் பரவத் தொடங்கியிருக்கிறது. எனவே, மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன? என்பது குறித்தும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை அனுமதிக்கலாமா? என்பது குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக, தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஊரடங்கு
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 15-ந்தேதி (நாளை) வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.
பண்டிகைக் காலங்களில், கொரோனா நோய்த் தொற்று பரவலைத் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தற்போது அண்டை மாநிலங்களில் பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

31-ந்தேதி வரை நீட்டிப்பு
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் 30-11-2021 நாளிட்ட அறிவிக்கையின்படி, கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள்31-12-2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 31-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.

பண்டிகைக் காலங்களில், பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, பொது மக்கள் நலன் கருதி, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

கடற்கரையில் அனுமதி இல்லை
அதாவது, சமுதாய, கலாசார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும். கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், வருகிற 31-ந்தேதி மற்றும் ஜனவரி 1-ந் தேதி ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
ஏற்கெனவே, அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும். மேலும், பின்வரும் செயல்பாடுகள், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

சுழற்சி முறை கிடையாது
அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும். தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாக பல மாதங்களாக பள்ளிகளுக்கு செல்லாததனால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், ஜனவரி 3-ந்தேதி முதல் அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மட்டும்), அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும்.

தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை
நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறையாக, நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

விதி மீறல்களுக்கு அபராதம்
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தீவிரமாக நோய்த் தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும். கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும், தற்போது அண்டை மாநிலங்களில் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோய் பரவி வருவதால், பொது இடங்களில், பொதுமக்கள் முக கவசம் அணியாமல் இருப்பதன் காரணமாக, நோய்த் தொற்று பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில், கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைபிடிக்குமாறும், மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறும், பொதுமக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அனைத்து நிறுவனங்களும் கொரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!