தீவிர போர் பயிற்சியில் சீனா: தைவான் குற்றச்சாட்டு!

சீனா-தைவான் இடையே அரை நூற்றாண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடிக்கிறது. கடந்த 1949-ம் ஆண்டு சீனாவில் நடந்த உள்நாட்டு போருக்குப் பின்னர், சீனாவின் பிடியில் இருந்த தைவான் பிரிந்து, ஒரு தனி நாடாக உருவெடுத்தது. பெரும்பாலான உலக நாடுகளின் அங்கீகாரம் இல்லாதபோதிலும், தைவான் தன்னை தன்னாட்சி பெற்ற தனிநாடு என்கிறது.

ஆனால் சீனாவோ தைவானில் அமைந்திருக்கும் அரசு, சட்டவிரோதமானது, தைவான் சீனாவிலிருந்து பிரிந்த ஒரு மாகாணப் பகுதி என்கிறது. அதுமட்டுமின்றி, அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா மிரட்டி வருகிறது. இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக சீனா-தைவான் இடையிலான ராணுவ பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தங்கள் நாட்டின் மீது படையெடுக்க, எல்லையில் படைகளை குவித்து, போர் பயிற்சியில் ஈடுபட சீனா தயாராகி வருவதாக தைவான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் ராணுவ மந்திரி சியு குவோ-செங் தாக்கல் செய்த அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் “சீனாவின் கிழக்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளில் பயிற்சிகளை நடத்துவதாகக் கூறி சீனா படைகளை நிலைநிறுத்தலாம். மேலும் தைவானை சுற்றி வளைக்கும் நோக்கில் மேற்கு பசிபிக் பகுதிக்கும் சீனா போர்க்கப்பல்களை அனுப்ப வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!