அமைச்சரவை மாற்றத்தின் பின்னரே பசில் நாடு திரும்புவாரா?

தற்போதைய அமைச்சரவையில் மாற்றம் செய்ததன் பின்னரே நிதி அமைச்சர் நாடு திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர் பசில் வெளிநாட்டுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதன் பின்னர் பசில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பசில் வெளிநாடு செல்ல முன்னர், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதனை ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் கடுமையாக வலியுறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு தீர்மானங்கள் எடுக்கும் போது ஆளும் கட்சிக்கு உள்ளே இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சனம் செய்து பிரபல்யம் அடைய எத்தனிக்கும் அமைச்சர்களுடன் முன்னோக்கிப் பயணிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு ஆளும் கட்சிக்குள் இருந்து கொண்டு விமர்சனங்களை வெளியிடும் அனைவரையும் பதவிகளிலிருந்து நீக்க வேண்டுமென ஜனாதிபதியிடமும்,பிரதமரிடமும் பசில் கோரியுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான அமைச்சர்களிடம் தொடர்ந்தும் செல்லம் கொஞ்சுவதில் பயனில்லை என பசில் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!