சிறுமி படுகொலைக்கு நீதி கோரி போராட்டம்!

முல்லைத்தீவு -உடையார்கட்டு மூங்கிலாறு கிராமத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் சட்ட விரோத கருக்கலைப்புக்கு முயற்சித்த போது கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி முல்லைத்தீவு மூங்கிலாறு கிராம மக்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
    
மூங்கிலாறு கிராமத்தில் நேற்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறுமி கடந்த 15 ஆம் திகதி காணாமல் போயுள்ளதாக, தாயாரால், புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யபட்டமைக்கு அமைவாக நான்கு நாட்கள் தேடுதலின் பின்னர் கைவிடபட்ட வளவு ஒன்றிலிருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

சிறுமியின் சட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையில், பிறப்புறுப்பில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இறப்பு சம்பவித்துள்ளதோடு இரண்டுமாதம் சிறுமி கருவுற்றும் இருந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி கருத்தரித்த பின்னர் சட்ட விரோதமான முறையில் கருக்கலைப்புக்கு முயற்சித்து அதிக இரத்த போக்கு ஏற்பட்டு சிறுமி உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரியும் சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த கோரியும் கொலை செய்யப்பட்ட சிறுமியின் கிராமமான மூங்கிலாறு கிராமத்தின் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

மூங்கிலாறு சந்தியிலிருந்து பேரணியாக உடையார்கட்டு மகா வித்தியாலயம் வரை பேரணியாக சென்று கறுப்பு கொடிகள் மற்றும் கறுப்பு பட்டிகளை அணிந்து கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!