குவைத்தில் சந்திரலதாவுக்கு தூக்குத் தண்டனையா?

குவைத்தில் இலங்கை பெண்ணொருவருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
    
இவ்வாறு தகவல்கள் வெளியானதையடுத்து குவைத் பொலிஸாரின் உதவியுடன் அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளால் அப்பெண் பாதுகாப்பாக நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை பிரஜையான கிருஷ்ணன் சிறியானி சந்திரலதா என்ற பெண் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளி தொடர்பில் குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் அவதானம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றதன் பின்னர் கடந்த 21 ஆம் திகதி குவைத் பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதோடு , சந்திரலதாவின் நிலைமை தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவர் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தை கண்டு பிடிப்பதற்கும் அவர்களது ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய குவைத் பொலிஸாரின் ஒத்துழைப்பிற்கமைய , அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளால் சந்திரலதா பணிபுரிந்த இடம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அவர் கடந்த 22 ஆம் திகதி குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சந்திரலதா பணிபுரியும் வீட்டு உரிமையாளர்கள் அவரின் இலங்கை பயணத்தை தாமதப்படுத்தியமையால் , நாடு திரும்புவதற்காக அவர் தனது பிள்ளைகளிடம் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தான் பணி புரிந்த வீட்டு உரிமையாளர்கள் தனக்கு உரிய நேரத்தில் சம்பளத்தை வழங்கியதாகவும் , அவர்களால் எவ்விதத்திலும் தான் அச்சுறுத்தலுக்கோ அல்லது துன்புறுத்தலுக்கோ உள்ளாக்கப்படவில்லை என்றும் சந்திரலதா உறுதிப்படுத்தியுள்ளார்.
குவைத் அதிகாரிகள் இந்த விசாரணையை நிறைவு செய்ததையடுத்து , சந்திரலதா மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்காக அங்குள்ள தூதரகம் ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!