இறுதிச்சடங்கின் போது கண்விழித்த சடலம்: பேரதிர்ச்சியில் குடும்பத்தார்!

இந்தியாவில் உயிரிழந்த நபரின் உடலுக்கு சுடுகாட்டில் தீ வைக்க சில நிமிடங்களே இருந்த நிலையில் அவர் திடீரென கண் விழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் நரேலாவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. 62 வயதான சதீஷ் பரத்வாஜ் என்பவர் நேற்று முன் தினம் உயிரிழந்தார் என குடும்பத்தார் கூறினர். பின்னர் அவரின் சடலத்தை சுடுகாட்டுக்கு எடுத்து சென்று படுக்க வைத்து இறுதிச்சடங்கு நடத்தினார்கள்.

    
இதை தொடர்ந்து சதீஷ் உடல் மீது போர்த்தப்பட்ட போர்வையை எடுத்துவிட்டு சிதைக்கு தீ வைக்க நினைத்த போது தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. அதன்படி சதீஷ் திடீரென கண் விழித்தார், இதனை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து பொலிசார் கூறுகையில், சதீஷ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சில காலமாகவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு வெண்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் வெண்டிலேட்டரில் இருந்து அவரை எடுத்தவுடன் மூச்சு விடுவதை நிறுத்தியுள்ளார்.
இதையடுத்து சதீஷ் இறந்துவிட்டதாக குடும்பத்தார் கருதியுள்ளனர்.

மருத்துவமனையின் அறிவுறுத்தலை கேட்காமலேயே சதீஷ் குடும்பத்தார் அவர் இறந்துவிட்டார் என நினைத்து அழைத்து வந்துள்ளனர் என கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!