கடந்த நான்கு வருடங்களில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் 48 விமான பயணங்களுக்கு 22 லட்சம் ரூபா செலவிட்டிருக்கிறார் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.இலங்கையின் வேறு எந்த மாகாண முதல்வரும் இந்த அளவு பயணங்களையோ செலவுகளையோ செய்ததில்லை என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாண முதலமைச்சர் முன்னாள் வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சந்திரசிறியின் மூலம் பெற்ற விசேட அனுமதியின் பெயரில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கான விமானப் பயணங்களிற்காக இதுவரையில் 22 லட்சத்து 61 ஆயிரம் ரூபா, மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வாகனத்தில் கொழும்பு சென்றுவந்த நிலையில் முன்னாள் ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தான் கொழும்பிற்கு விமானம் மூலமே சென்று வருவதனால் முதலமைச்சரின் பயணத்திற்கும் மாகாணத்திற்கு ஒதுக்கீடு செய்யும் அரச நிதியில் அனுமதிக்கலாம் என விசேட அனுமதியினை வழங்கினார்.
மகிந்த ராஜபக்சவினால் வழங்கப்பட்ட இந்த அனுமதியின் பிரகாரம் 2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையான 4 ஆண்டுகளில் வடக்கு மாகாண முதலமைச்சர் அரச செலவில் 48 தடவைகள் விமானம் மூலம் கொழும்பிற்கு சென்று வந்துள்ளார். இதற்காகவே குறித்த 22 லட்சத்து 61 ஆயிரம் ரூபா பணம் செலவு செய்யப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் முதலமைச்சர் 2014ம் ஆண்டில் 11 தடவைகளும் , 2015ம் ஆண்டில் 13 தடவைகளும் , 2016ம் ஆண்டில் 15 தடவைகளும் பறப்பில் ஈடுபட்டுள்ளதோடு 2017ம் ஆண்டில் 9 தடவைகள் பறப்பில் ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறு பயணித்த 48 தடவைகளும் தன்னுடன் ஓர் உதவியாளரையும் அழைத்துச் சென்றுள்ளார். அவ்வாறு அழைத்துச் சென்ற உதவியாளருக்கும் மாகாண சபையின் நிதியே வழங்கப்பட்டுள்ளது.
இவற்றின் அடிப்படையில் 2014 , 2015ம் ஆண்டுகளில் ஓரு சேவைக்காக 35 ஆயிரம் ரூபாவீதம் பணம் செலுத்தப்பட்ட நிலையில் 2016ம் ஆண்டு முதல் இன்றுவரையில் ஓர் சேவைக்காக 58 ஆயிரம் ரூபா வீதம் பணம் செலுத்தப்படுகின்றது.
இதேநேரம் இலங்கையில் உள்ள 9 மாகாணங்களில் வேறு எந்த மாகாண முதலமைச்சரிற்கும் குறித்த சலுகை தற்போதுவரையில் வழங்கப்படுவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!