ஆளுநரை விமர்சித்த சிவாஜிலிங்கம் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு?

பேச்சு சுதந்திரம் , அடிப்படை சுதந்திரம் என்பன கிடைக்கின்றது என்பதற்காக , தேசத் துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் இருக்கிறது எனத் தவறாக நினைக்க வேண்டாம் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
    
யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர்
” வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு 14 மெய்ப்பாதுகாவலர்களும் 6 சாரதிகளும் காணப்படுகின்றனர். இவர்களுக்காகப் பல இலட்சம் ரூபாய்கள் செலவிடப்படுகிறது. அத்துடன் ஆளுநர் தனது எரிபொருள் மற்றும் ரீசேட் கொள்வனவிற்காகப் பல இலட்சம் ரூபாவை மக்களின் வரிப்பணத்தில் செலவிடுகின்றார்” எனத் தெரிவித்து இருந்தார்.

அந்நிலையில் அதற்குப் பதில் அளிக்கும் முகமாக வடமாகாண ஆளுநர் செய்திக் குறிப்பொன்றை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த செய்தி குறிப்பிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

ஆளுநரின் ஊழியர்கள் , மாகாண நியமன ஊழியர்கள் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். ஆளுநர் நீதியான சமுதாயத்தை நம்புகிறார். அதற்காக நேர்மையாக பணியாற்றுகிறார். இங்குள்ள சிலர் மாற்றுக்கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

அவர்களுக்குப் பேச்சு சுதந்திரம் போன்ற அடிப்படை சுதந்திரங்கள் உண்டு, அவற்றினை அவர்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. அந்த சுதந்திரங்களைப் பயன்படுத்தி தேசத் துரோக செயல்களில் ஈடுபட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!