பொதுமக்களிடம் உண்மையை மறைக்கும் கோட்டாபய அரசாங்கம்?

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினையின் உண்மை தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. அப்போதுதான் மக்கள் நிலைமையை உணர்ந்து தேவையற்ற செலவுகளை குறைத்துக்கொள்ள முயற்சிப்பார்கள். ஆனால் அவ்வாறான நடவடிக்கையை அரசாங்கத்திடம் காணமுடியாமல் இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர்  திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.   

கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

நாட்டின் பொருளாதார பிரச்சினையின் உண்மை தன்மையை அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். அதன் மூலம் மக்களின் உதவியுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். அத்துடன் பொருளாதார நெருக்கடிக்கு கோவிட் தொற்றுடன் அரசாங்கத்தின் பிழையான தீர்மானங்களுமே காரணமாகும்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்துவருகின்றது. அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலை தொடருமானால் எதிர்காலத்தில் உணவு பிரச்சினைக்கும் முகம்கொடுக்க நேரிடும் அபாயம் இருக்கின்றது.

இந்த நிலை ஏற்படுவதற்கு கோவிட் தொற்று பிரதான காரணமாக இருந்தாலும் அரசாங்கம் மேற்கொண்ட திடீர் தீர்மானங்களும் இதற்கு பாரியளவில் தாக்கம் செலுத்தி இருக்கின்றது. குறிப்பாக எமது ஏற்றுமதி 30வீதம் குறைவடைந்துள்ளது. அதேபோன்று கடந்த மூன்று மாதங்களில் இறக்குமதி செலவு பாரியளவில் அதிகரித்திருக்கின்றது.

ஏற்றுமதி குறைவதென்பது எமது வருமானம் குறைவடைவதாகும். அத்துடன் நாட்டில் இருக்கும் மொத்த வெளிநாட்டு செலாவனி 1.3பில்லியனாகும். இந்த தொகை எமக்கு ஒரு மாதகாலத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளவே போதுமானது.

அதேபோன்று சர்வதேச தரப்படுத்தல் நிறுவனமான பிட்ச் ரேடிங் நிறுவனம் எமது பொருளாதாரத்தை மூன்று சீ தரத்தில் இருந்து 2 சீ தரத்துக்கு தரமிறக்கி இருக்கின்றது. இன்னும் ஒரு தரம் குறைந்தால் எமது நாடு பங்குராேத்து நிலைக்கு செல்லும்.

அதன் காரணமாக தற்போது பொருட்களை இறக்குமதி செய்ய வங்கிகளில் நாணய கடிதம் திறக்கும் வசதிகளும் இல்லாமல் போயிருக்கின்றது.

அதனால் எதிர்காலத்தில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் நிலையே ஏற்படும்.

அத்துடன் இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு நாங்களும் பாரிய அர்ப்பணிப்பை செய்தோம். ஆனால் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சிக்கு பெரும்பான்மை அதிகாரம் கிடைத்த பின்னர் அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கும்போது எம்முடன் எந்த கலந்துரையாடல்களையும் மேற்கொள்வதில்லை.

அரசாங்கம் அமைக்கப்பட்டு இன்றுவரைக்கும் எம்முடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தியதில்லை. நாட்டின் அரசியல் நிலை தொடர்பாக அரண்டுவாரங்களுக்கு ஒருமுறை ஜனாதிபதியுடன் கலந்துரையாட நாங்கள் நேரம் கேட்டிருந்தோம்.
அதற்கு, அரசியல் தொடர்பில் கைப்பதாக இருந்தால் பிரமத் மஹிந்த ராஜபக்ஷ்வுடன் கலந்துரையாடுமாறும் நிதி தொடர்பாக கதைப்பதாக இருந்தால் நிதி அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளுன் கலந்துரையாடுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
மஹிந்த ராஜபக்ஷ் ஜனாதிபதியாக இருந்தபோதும் நாங்கள் அந்த அரசாங்கத்தில் அமைச்சு பொறுப்புக்களை வகித்திருந்தோம். அப்போது அரசியல் நிலைமை தொடர்பாக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அவருடன் நாங்கள் கலந்துரையாடி இருக்கின்றோம். அந்த நிலைமை தற்போது இல்லை. அதனாலே நாங்கள் நாடு எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினைக்கு தீர்வுகாண எமது கருத்துக்கள் மற்றும் ஆலாேசைகளை நாங்கள் ஊடகங்கள் ஊடாக அரசாங்கத்துக்கு அறிவிக்கின்றோம்.

எனவே நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினையின் உண்மை தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. அப்போதுதான் மக்கள் நிலைமையை உணர்ந்து தேவையற்ற செலவுகளை குறைத்துக்கொள்ள முயற்சிப்பார்கள். ஆனால் அவ்வாறான நடவடிக்கையை அரசாங்கத்திடம் காணமுடியாமல் இருக்கின்றது என்றார்.  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!