மைத்திரியை சிறையில் அடைக்க முயற்சி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
    
இதன் பின்னணியில் செயற்படுபவர்கள் யார் என்பதும் எமக்குத் தெரியும் என்றும்,நேரம் வரும் போது விபரம் வெளியிடப்படும் என்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும்,இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எமது தலைவர் அரசை விமர்சித்து வருவதால், ஏதாவது செய்து அவரைச் சிறையில் அடைப்பதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன்,எமது கட்சியும் தயார் நிலையில் உள்ளது.

மைத்திரிபால சிறிசேனவைப் பலவந்தமாகச் சிறையில் அடைக்க முற்படுவது யார் என்பதும் எமக்குத் தெரியும். அரச பிரதானிகளா அல்லது வெளியில் உள்ளவர்களா எனத் தற்போதே குறிப்பிட முடியாது. நேரம் வரும்போது எல்லாவற்றையும் வெளிப்படுத்துவோம்.

நாட்டில் சட்டம் என்று ஒன்று இருக்கின்றது. ஆனால், அதற்கு அப்பால் சென்று, மைத்திரியைச் சிறையில் அடைக்க வேண்டும் எனச் சில அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் இரகசிய நிகழ்ச்சி நிரலொன்று இருக்கக்கூடும்.அதேவேளை, அரசிலிருந்து வெளியேறுவது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்னும் முடிவெடுக்கவில்லை.

அரசின் பயணம் தவறெனில் அதனைத் தைரியமாகச் சுட்டிக்காட்ட மத்திய செயற்குழு அனுமதித்துள்ளது. அரசின் பதவிக் காலம் முடியும் வரை நாம் அரசில் அங்கம் வகிப்பாமோ என்பதை இப்போது கூறமுடியாது. சிலவேளை, எமது கட்சி நீக்கப்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!