ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த எந்த நேரமும் தயார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுடன் நேரில் பேச்சு நடத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்நேரமும் தயார் நிலையில் உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் விரைவில் முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது எனச் செய்தி வெளியாகியிருந்தது.

இந்த மாத இறுதி வாரத்தில் கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சு ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இரா.சம்பந்தன்-

பேச்சுக்கான உத்தியோகபூர்வ அழைப்பு எமக்கு இதுவரை வரவில்லை. எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுடன் நேரில் பேச்சு நடத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்நேரமும் தயார் நிலையில் உள்ளது.

பேச்சு என்ற பெயரில் காலத்தை வீணடிக்க நாம் விரும்பவில்லை. இந்த விடயத்தை, ஜனாதிபதி எம்மைப் பேச்சுக்கு அழைக்கின்றபோது நேரில் தெரிவிப்போம்.

அர்த்தபுஷ்டியான பேச்சுக்கு நாம் திறந்த மனதுடன் தயாராக இருக்கின்றோம். நிரந்தர அரசியல் தீர்வுக்கு வழியமைக்கும் வகையில் அந்தப் பேச்சு இடம்பெற வேண்டும். அதைவிடுத்து நாம் இனியும் ஏமாறத்தயாரில்லை. அனைத்துக் கருமங்களும் நல்லபடி அமைய வேண்டும் என்பதே எமது விருப்பம்” – என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!