விஜயகலா கூறியதில் என்ன தவறு? – சுமந்திரன் கேள்வி

விடுதலைப் புலிகள் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட கருத்தில் எந்த தவறும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கரவனெல்ல பகுதியில் நடந்த புதிய அரசியலமைப்பு தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“முன்னைய அரசாங்கங்களால் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனைகளை ஏற்கத் தமிழ் மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் தீவிரமாக செயற்பட்ட காலத்தில், அந்த தீர்வு திட்டங்களை முன்னைய அரசாங்கங்கள் தான் முன்வைத்தன. நாங்களல்ல.

ஆனால் இப்போதைய அரசாங்கம், அந்த யோசனைகளின் அடிப்படையில் தீர்வைத் தர முடியாது என்கிறது. ஏனென்றால் விடுதலைப் புலிகள் இப்போது இல்லை. இது தவறானது.

அவ்வாறாயின், விடுதலைப் புலிகள் உயிர்ப்புடன் இருந்தால் மட்டும் தான், அரசாங்கம் தீர்வு ஒன்றைத் தரும் என்றே அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கிறது.

இது தான், விஜயகலா மகேஸ்வரன் அவ்வாறு பேசக் காரணம். இந்தச் சூழ்நிலையை உருவாக்கியது சிறிலங்காவின் அரசியல் தலைவர்கள் தான்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!