வெவ்வேறு பாதையில் ஜனாதிபதியும், பிரதமரும்!

ஜனாதிபதியும் பிரதமரும் பாராளுமன்றத்தில் தனித்தனித் தீர்மானம் எடுத்து சுயமாக செயற்படமுடியாது என, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
    
பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு சலம் வடியும் காயமாக மாறியுள்ள நாட்டை குணப்படுத்த சம்பிரதாய வேலைத்திட்டம் ஒருபோதும் ஒத்துவராது என்று குறிப்பிட்டார்.

நாடு வீழ்ந்துள்ள பொருளாதார பாதாளத்தில் இருந்து மீட்சி பெற முடியுமா என்று கேட்டால் அதற்குரிய நேரடி பதில்”முடியும்” என்று கூறிய எதிர்க்கட்சி தலைவர், நிலையானதும் நேர்மையானதுமான வேலைத்திட்டமே அதற்கு அவசியமாகும் என்று கூறினார்.

ஜனாதிபதியும் பிரதமரும் பாராளுமன்றத்தில் தனித்தனித் தீர்மானம் எடுத்து சுயமாக செயற்பட முடியாது. விசேடமாக சட்டவாக்கத் துறை, நிறைவேற்று துறை, நீதித் துறை என்ற மூன்று தூண்கள் ஒன்றுப்பட்ட சுழற்சி முறைமை இருக்க வேண்டும் என நம்புகிறேன் என்றும் தெரிவித்தார்.

சமூக ஜனநாயக முறைமையின் பிரகாரம் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என தான் நம்புவதுடன், மிகவும் யாதார்த்த பொது வேலைத்திட்டத்தின் தேவைப்பாட்டை முன்பு ஒருபோதும் இல்லாத அளவுக்கு உணர்வதாகவும் குறிப்பிட்டார்.

குறித்த பொது வேலைத்திட்டம் யதார்த்தபூர்வமாக இருப்பதுடன் தினந்தோறும் கலந்துரையாடலுக்கு உட்பட கூடிய நேர்மையானதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் தொடர்பான தற்போதைய கருத்துக்கள் யதார்த்தபூர்வமற்றது என்று கூறிய அவர், வருமான பற்றாக்குறை மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றார்.

வருமான பற்றாக்குறையை மறந்து பொருளாதார வளர்ச்சி வேகம் தொடர்பில் பேசுவது நகைப்புக்குரியது என்றும் கூறினார்.


இவ்வாறான அனர்த்த காலத்தில் இராஜதந்திர தலையீட்டின் தேவையை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி தலைவர்,

இலங்கையினால் நியமிக்கப்பட்ட தூதுவர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகள் மிகவும் அதிகமாகும். துரதிஷ்ட வசமாக பெரும்பாலான தூதுவர்கள் இதனை புரிந்து கொள்ளாமல் இருப்பதுடன் அது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என்றும் கூறினார்.

நாட்டை கட்டியெழுப்பும் பிரதான ஐந்து தூண்களில் சிவில் அமைப்புகளும் உள்ளடங்க வேண்டும் என்று கூறிய எதிர்க்கட்சி தலைவர், நல்லாட்சி மற்றும் உயரிய ஆட்சி முறைமைக்கு அது அத்தியாவசியம் என்றும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!