யூடியூப் பார்த்து தற்கொலை செய்துகொண்ட 13 வயது சிறுமி!

திருச்சியில் 13 வயது பள்ளி மாணவி யூடியூப் பார்த்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி கண்டோன்மென்ட் அலெக்சாண்ட்ரியா ரோடு பகுதியை சேர்ந்தவர் ஷர்மிளா.

இவர் திருச்சி எஸ்பிஐ வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் புருஷோத்தமன். இந்த தம்பதி கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 13 வயது மகள் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
    
தாய் தந்தை பிரிந்து வாழ்வது வரும் நிலையில், மாணவி திருச்சியில் அம்மாவுடன் வசித்து வருகிறார். எப்போதும் போல நேற்று காலையும், மாணவியின் தாய் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்த அவர் கதவை தட்டிய போது, மகள் கதவை திறக்கவில்லை. பின்பு சந்தேகத்தின்பேரில் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்திருக்கிறார். அப்போது தனது மகள் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது.

உடனடியாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அதன்பேரில் விசாரணை செய்த போலீசார் தற்கொலை முடிவு செய்துகொள்ள காரணம் என்னவென்று ஆதாரங்களை சேகரித்தனர். முன்னதாக மாணவி தன் தாயிடம் உடல் பருமனாக இருப்பதாக தொடர்ந்து குறிப்பிட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உடல் பருமனால் தொடர்ந்து மனஉளைச்சலில் இருந்த மாணவி, யூடியூபில் பல்வேறு வீடியோ காட்சிகளை பார்த்து அதன் மூலம் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறார் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தற்போது மாணவியின் உடலை திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!